இதய வீக்கம்' என்பது ஆபத்தான நோயா?
'ஸ்ட்ரெஸ் கார்டியோமையோபதி' எனப்படும் இதய வீக்க நோயானது, சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒன்று; மனஅழுத்தமே, இந்நோய்க்கான அடிப்படை காரணம்! மவுன கொலையாளியான மன அழுத்தம், இதயத்தை பலவீனப்படுத்தி, பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும். அந்தவகையில், இது ஆபத்தான நோய்தான்!
2மன அழுத்தம் இதயத்தை பலவீனமாக்குவது எப்படி?
மன அழுத்தம் என்பதை, தன்னுள் நிகழும் ஒரு அசாதாரண நிலையாகத்தான் உடல் எடுத்துக் கொள்கிறது. அந்த சூழ்நிலையில், பல்வேறு ஹார்மோன்களை உடல் உற்பத்தி செய்து, இதயத்தை பாதுகாக்கிறது. இந்த ஹார்மோன்கள், சில நேரங்களில், இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தில் தடைகளை உண்டாக்கி விடும்; இதனால், இதயம் பலவீனம் அடையும்!
3இந்த நோய் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியா?
பெரும்பாலும் அப்படியில்லை! ஆனாலும், பல்வேறு நோய்களுக்கு இது வழிவகுக்கும். நீடித்த
மன அழுத்தத்தினால், பரம்பரையில் முன்னர் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருந்தால்,
இதற்கு வாய்ப்புண்டு!
4இதய வீக்க நோய்க்கும், மாரடைப்புக்கும் உள்ள வேறுபாடுகள்...?
நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், அதிகமாக வியர்த்தல், தலை சுற்றல் என, இரண்டு நோய்களுக்குமே பொதுவான அறிகுறிகள்தான்! ஆனால், மாரடைப்பு, இதயத்தின் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் வருகிறது. இதயவீக்கம் என்பதோ, இதய தசைகளில் ஏற்படும் இறுக்கத்தினால், ரத்த ஓட்டம் தடைபட்டு உண்டாகிறது.
5'இது பெண்களுக்கான நோய்' என்பது உண்மையா?
ஓரளவிற்கு உண்மை! இதுவரையில், 35 - 40 வயதுகளில் உள்ள பெண்களும், வயது முதிர்ந்த பெண்களுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், இளம் வயது ஆண்களையும், இந்நோய் கணிசமாக தாக்கியிருக்கிறது.
6மாதவிடாய்க்கும், இதய வீக்க நோய்க்கும் சம்பந்தம் உண்டா?
பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சியின் போது டெஸ்டோஸ்டிரான், புரோஜஸ்ட்ரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்கள், இயற்கையாகவே இதயத்தை பாதுகாக்கும் திறன் பெற்றவை. மாதவிடாய் முடியும் வயதில், இந்த ஹார்மோன்கள் சுரப்பது நின்று விடுவதாலும், அந்த நேரத்தில், மனதில் ஏற்படும் பிரச்னைகளாலும், வயது முதிர்ந்த பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
7இந்நோயால் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்...?
இதயத் துடிப்பில் மாற்றம் இருக்கும். குறிப்பாக, இதயத்தின் இடது அறை வீக்கமாக காணப்படும்.
8இறுக்கமான பணிச் சூழலில் உள்ள அனைவருக்கும், 'இதய வீக்கம்' வருமா?
அப்படி சொல்லிவிட முடியாது! இன்று, எல்லாப் பணி இடங்களிலும் போட்டிகள் இருப்பதால், மன அழுத்தம் அதிகமாகி விட்டது. குழந்தைகளுக்கும் கூட, மன அழுத்தங்கள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படுகின்ற இறுக்கங்களை, சரியான வழியில் வெளியேற்றத் தெரிந்தவர்களுக்கும், இயல்பிலேயே எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கும், பாதிப்பு இருக்காது!
9மாரடைப்பை போல மீண்டும், மீண்டும் இந்நோய் தாக்குமா ?
இதுவரையில், முதல் முறை சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் இந்நோய் வந்தது இல்லை. ஆனால், தொடர்ந்து இறுக்கமான மனநிலையில் இருக்க நேர்ந்தால், இந்நோய் மீண்டும் தாக்கவும் வாய்ப்புண்டு!
10இதயம் வீங்காமல் காக்க...?
யதார்த்தத்தினை புரிந்து, ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் மனநிலைக்கு பழக வேண்டும்; பணிச்சூழலால் ஏற்படும் மன இறுக்கத்தினை, தகர்த்து விட அறிந்திருக்க வேண்டும்! இவை எல்லாவற்றையும் விட, மருத்துவரின் ஆலோசனையும், அதை தீவிரமாக பின்பற்றும் உறுதியும், ஒழுக்கமான வாழ்வும், இதயம் வீங்காமல் நிச்சயம் காக்கும்!