டயபர் வசதி அல்ல
டயபர் இன்றைக்கு எல்லா சிறுகுழந்தைகளுக்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு சிலர் நாள் முழுவதும் குழந்தைகளுக்கு டயபரை அணிவித்திருப்பர். அவர்களைப் பொறுத்தவரை டயபரினை அணிவிப்பதே சுத்தம் மற்றும் ஆரோக்கியம் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மை அதுவன்று.
டயபரானது குழந்தையின் உடல்நலத்திற்கும், சுற்றுசூழலுக்கும் பெருத்த கெடுதலை உண்டாக்கக் கூடிய மிகப்பெரிய எதிரி ஆகும்.
விளம்பரங்களில் கூறப்படுவது போல பன்னிரெண்டு மணி நேரம் ஆகியும் ஈரம் மேற்பரப்புக்கு வராமல் இருக்க டயபரில் என்ன வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன என்பதை யாரும் யோசிப்பதில்லை. டயபர் குழந்தைகளின் உடல்நலத்தில் நேரடிப் பாதிப்பினையும், சுற்றுசூழலில் மறைமுகப் பாதிப்பினையும் உண்டாக்குகின்றது.
டயபரில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் நச்சுப்பொருட்கள். டயபரின் மேற்பரப்பானது பாலிஎத்திலீனால் உருவாக்கப்பட்டது. பாலிஎத்தலீன் என்பது பெட்ரோலியப் பொருளிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை பிளாஸ்டிக் ஆகும்.
டயபரின் உள்ளடுக்களில் நீரினை உறிஞ்ச பாலிபுரோப்பிலீன் எனப்படும் தெர்மோபிளாஸ்டிக் பாலிமர் உள்ளது. இது புரோப்பலீன் வாயுவிலிருந்து தயார் செய்யப்படுகிறது. டயபரின் நடுஅடுக்கு வேதிப்பொருட்கள் மற்றும் மரத்தின் நாரால் உருவான மரக்கூழால் ஆன அதிக உறிஞ்சும் தன்மையைக் கொண்டது.
மேலும் இதில் அதிகமான உறிஞ்சும் தன்மை உடைய சோடியம் பாலி அக்ரிலேட் பொடி வடிவில் உள்ளது. இவ்வேதிச் சேர்மம் தண்ணீரினை தனது எடையைப் போல் 30 மடங்கு உறிஞ்சும் தன்மை உடையது. நச்சுப்பொருளாக அறிவிக்கப்பட்டிருக்கும் இது டயபரில் 5 கிராம் அளவில் உள்ளது.
இவற்றினை மறுஉபயோகம் செய்யவோ, மறுசுழற்சி செய்யவோ முடியாது. அதேபோல் இவை எளிதில் மக்குவதில்லை. இவை மக்க குறைந்தது 200 முதல் 500 வருடங்கள் ஆகும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளின் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு, சருமத்தில் ஏற்படும் பாதிப்பு நாள் முழுவதும் டயபரை அணிவிக்கும்போது டயபரின் வண்ணத்திற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்களால் வெப்பம் அதிகரித்து சரும அரிப்பு, புண், சரும அழற்சி, சருமம் நிறம் மாறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தேவையான காற்றோட்டம் இல்லாமல், பூஞ்சைகள் வளருவதற்கான சூழல் ஏற்பட்டு நாள்பட்ட சருமப்பிரச்சினைகள் உண்டாகும்.
புற்றுநோய் மற்றும் மலட்டுத்தன்மையை உண்டாக்குதல், சிறுவயது குழந்தைகளின் நோய்கள் பற்றிய ஆய்வில் டயபரை அணிவிப்பதால் இடும்பு தொடை நரம்பு பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்குழந்தைகளுக்கு நீண்டநாட்கள் தொடர்ந்து டயபரை அணிவிப்பதால் பின்னாளில் அவர்களின் விந்தணு உற்பத்தில் பாதிப்பு உண்டாகி மலட்டுத்தன்மை ஏற்படும். மேலும் இனப்பெருக்க உறுப்பில் புற்றுநோயையும் உண்டாக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அக்குழந்தைகள் டயபர் அணிந்திருப்பதாக எண்ணி இருந்த இடத்திலேயே சிறுநீர் மற்றும் மலம் கழிப்பார்கள். அவ்வாறு செய்வது தவறு என்ற எண்ணம் வரும்போது கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமல் அவற்றை அடக்கி உடல்நல குறைவுக்கு உள்ளாவார்கள்.
பன்னிரெண்டு மணி நேரம் சிறுநீரில் ஊறிய டயபராலும், அதில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களாலும் சிறுநீரகத் தொற்று நோய் அதிகரிக்குமே தவிர குறையாது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.
டயபரில் சேர்க்கப்படும் சில எளிதில் ஆவியாகக்கூடிய கரிமச்சேர்மங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் குழந்தைகளுக்கு தொற்றுநோயும், ஒவ்வாவையும் எளிதில் ஏற்படுகின்றன.
ஆக மொத்தத்தில் பயன்படுத்த எளிதாக உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக அதிக விலையுடைய, உடல்நலத்திற்கும் சுற்றுசூழலுக்கும் பாதிப்பை உண்டாக்கும் டயபர் நமக்கு அவசியமா?
அதனை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டுமா???
நம்முடைய இன்றைய குழந்தையின் நலத்தையும், வருங்கால சந்ததியினருக்கான வளமான சுற்றுசூழலையும் காப்பீர்.
🌹🍎