*இயற்கை வாழ்வியல் - மெய் ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானம்*
♻♻♻
இயற்கை வாழ்வியல் அல்லது இயற்கை மருத்துவம் என்ற துறை மிக மேன்மையான ஒன்று. காரணம் அத்துறை மெய் ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானம். உடலியக்கத்தையும், உயிரோட்டத்தின் மாறுபாடில்லா தன்மையையும் ஆதாரமாகக் கொண்டு செய்யப்படுகின்ற ஒரு மருத்துவம்.
இயற்கை வாழ்வியலின் தத்துவம்:
இவ்வுலக வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் அத்தியாவசியமானது நல்ல உடல் நலமும் மனநலமும் தான். ஏழையாய் இருப்பவன் நன்கு பணம் சம்பாதித்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்ளவும், செல்வம் மிகுந்தவன், அந்த செல்வத்தை அனுபவிக்கவும் முழுமையான உடல்நலம் அவசியம். இப்படிப்பட்ட உன்னதமான உடல்நலத்தை, காசு கொடுத்து கடையில் வாங்க முடியாது. உடல்நலம், மனநலம் என்னும் இரண்டு அம்சங்களும் இயற்கை விதிகளின்படி, வாழ்க்கை முறையை பின்பற்றி பெறப்படுபவை.
ஆனால், இந்த விஞ்ஞான உலகத்தில் மனிதன் விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்பட்டிருக்கும் வசதிகளை அனுபவித்துப் பழகி விட்டான். அதனால் எல்லாவற்றையும் விஞ்ஞானத்தால் அடைந்து விட முடியும் என்ற மயக்கத்தில் திளைக்கிறான். இப்படி சகல துறைகளிலும் அறிவியல் மனிதனின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த, அந்த அறிவியல் அனைத்துக்கும் நிரூபணங்கள் கொடுப்பதே காரணம்.
விஞ்ஞானம் வளர்ந்து எவ்வாறு மனித சமுதாயத்திற்குப் பல நன்மைகளை வழங்கிக் கொண்டிருப்பது உண்மையோ, அதுபோல அது பல மடங்கு தீமைகளையும் விளைவித்துக் கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது. மனிதன், அறியாமையால் முழுமையாகத் தன்னை விஞ்ஞானத்திடம் அடகு வைத்துவிட்டான். அவன் இந்த அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, விழிப்புணர்வு பெற்று, விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் தீமைகளிலிருந்து விலகி, அதன் ஒளிமயமான வளர்ச்சியை மட்டும் வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள பழக வேண்டும்.
இவ்வாறு செய்வதனால், அவன் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் கொடுக்கும் அறிவியலிலிருந்து விலகி, நன்மையை மட்டுமே கொடுக்கும் மெய்ஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கை வாழ்வியலை மேற்கொள்வான். அதன் மூலம் அவனது வாழ்க்கையில் உடல்நலம், மனநலம், மனிதாபிமானப் பண்பு ஆகியவை மேலோங்கி வளரும்.
உடல், உயிராற்றல், மனம் ஆகிய மூன்றுக்கும் உள்ள தொடர்பு:
அறிவியலால் ஆய்வுக்கூட ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாத இரண்டு முக்கிய அம்சங்கள் மனித உடலில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்று உயிராற்றல். இரண்டாவது அவனது மனம். இந்த இரண்டு அம்சங்களையும் எந்தப் பரிசோதனைக் கூடத்தாலும், நவீன உபகரணங்களாலும் ஆராய்ச்சி செய்துவிட முடியாது.
உயிராற்றலை சோதனைக்கு உட்படுத்தப்பட முடியாது. ஆனால் அதன் இயக்கத்தை மின் ஆற்றலின் இயக்கத்தோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம். கண்ணால் காண முடியாத மின்னாற்றலை மின்விளக்குகளில் ஒளியாகவும், இயந்திரங்களில் இயக்கமாகவும், மைக்ரோபோனில் ஒலியாகவும், மின் அடுப்பில் வெப்பமாகவும் காண்கிறோம். இப்படி உயிராற்றலும் மனித உடலில் அவனது கண்களில் ஒளியாகவும், குரல் நாண்களில் ஒலியாகவும், உடல் முழுவதும் வெப்பமாகவும், இயக்கமாகவும் இயங்குவதை உணரலாம்.
இந்த உயிராற்றலானது மனித உடலில் மனோமயமாகவும் மிக நுட்பமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மனதின் இயக்கம் மனித உடல் நலத்தின் மேன்மைக்கு முழுமுதற் காரணமான ஒன்றாகும். மனம் என்ற ஒன்றை, மூளை, இதயம், நுரையீரல், உணவுப்பாதை, எலும்பு மண்டலம் என்று பல்வேறு உறுப்புகளைப் பிரித்து ஆராய்ந்து காட்டுவது போல சுட்டிக் காட்ட முடியாது.
மனித உடலில் மனம் என்பது எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு விஞ்ஞான ரீதியான பதில் கிடையாது. ஆனால் மனம், மனசாட்சி என்ற கருத்துக்களை நாம் அதிகமாக உபயோகப்படுத்துகிறோம். இவற்றிற்கான விளக்கத்தை, மெய் ஞானத்தை அடியொற்றிய வேதாந்தரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மட்டுமே உணர முடியும். உளவியலும் வேதாந்தமும் மனதை எண்ணங்களின் தொகுப்பு அல்லது கருத்துக்களின் கோவை என்றே விளக்குகிறது.
அப்படிப்பட்ட எண்ணங்களின் தொகுப்பாகிய மனதை மனித உடலுக்குள்ளே இங்கேதான் இருக்கிறது என்று சுட்டிக் காட்ட முடியாது. மனம் என்பது மனிதனுக்கு உள்ளேயும் வெளியேயும் பரவெளி முழுவதும் பரவி நிற்கின்ற ஒன்று.