*தமிழ் கூறும் சஞ்சீவி உணவு*
♻♻♻
மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு,
மக்கள் உண்ணும் உணவும் உணவுப் பழக்கவழக்கங்களுமே
அவர்களின் உடல் நலத்தைக் தீர்மானிக்கின்றன. தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்ககூடிய சஞ்சீவி மருந்தாகக் கருதப்படுகிறது. இயற்கை உணவுமுறையினையும் இயற்கையோடு இயைந்த பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் உடல்நலத்தையும் உளநலத்தையும் பாதுகாக்க முடியும்.
இன்று சமையல் முறைகள் நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம்,
மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுகின்றன. உணவகங்கள்
பெருகியுள்ளன. சத்துக்காக அன்றிச் சுவைக்காக உண்ணும் நடைமுறை மிகுந்திருக்கிறது. அட்டைப்பெட்டிகளிலும் தாள் பைகளிலும் பதப்படுத்தி அடைத்த ஆயத்த உணவுவகைகள், விரைவு உணவுகள், வழக்கத்துக்கு வந்துள்ளன. அதனால், நோய்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உணவே மருந்து என்னும் நிலைமாறி, மருந்தே உணவு என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்...
திருமூலரும் உடலைக் காத்தலின் தேவையை வலியுறுத்தியுள்ளார். உடல்நலனை விரும்புவோர் முறையான உணவுப் பழக்கத்தை
மேற்கொண்டால், நெடுநாள் நலமாக வாழலாம். உண்பதற்காக
வாழாமல், வாழ்வதற்காக உண்டால் மருந்தென்பதே உடலுக்குத்
தேவை இல்லை...