கால் வீக்கம், நரம்பு சுருக்கமா? -
அலட்சியம் காட்டினால் சிக்கல்!
இதற்கான தீர்வு: - கீழே கொடுத்துள்ளேன். முத்திரை, பிரசர் புள்ளிகள் மற்றும்
யோகா சுவரில் ஒட்டி செய்ய வேண்டும்.
அது ரத்தக்குழாய்களில் சிக்கலை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு வழி வகுத்து
விடும் என்கிறார், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனை, ரத்த நாள அறுவை
சிகிச்சை துறை தலைவர் ஜெயக்குமார்.
பிரச்னைகள் குறித்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:
1. ரத்த நாள பிரச்னை என்றால் என்ன?
நல்ல ரத்தம் தமனி (arteries) வழியாகவும், கெட்ட ரத்தம், இதயத்திற்கு சிரை
(veins) வழியாகவும் செல்கிறது. இந்த பகுதிகளிலும், திசுக்களுக்கு பிராண வாயு
அல்லது சக்திக்கான பொருட்களை கொண்டு செல்லும் நுண்ணிய பிரத்யேக குழாய்களிலும்,
'மால் பார்மேசன்' பாதிப்பு ஏற்பவதையே, ரத்த நாள பிரச்னை எனப்படுகிறது.
2. அதனால், எந்த மாதிரியான பாதிப்பு வரும்; ரத்தப் போக்கு இருக்கும்
என்கிறார்களே?
தமனியின் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, குழாயின் சுவற்றில் பலூன்
மாதிரியான வீக்கத்தை ஏற்படுத்தும். நாட்கள் ஆக ஆக பெரிதாகி, ஒரு கட்டத்தில்
வெடித்து, ரத்தப்போக்கு ஏற்படும். சத்து, பிராண வாயுவை எடுத்துச் செல்லும்
ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால், அவற்றை சரி செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் கை, கால்கள், உறுப்புகளை அகற்றும் நிலையும் வரும்.
3. இதற்கு, 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்யலாமா?
இதயத்திற்கு, 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்வது போன்று, ரத்தக்குழாயின் அடைப்பை
நீக்க, 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்யலாம். ரத்தக்குழாய் அடைப்பு உள்ள
பகுதியில், நவீன முறையில் ஊசி மூலமாக, பலூனை செலுத்தி அழுத்தம் கொடுப்பதன்
மூலம் ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யலாம். குழாய் வெடித்து ரத்தப்போக்கு
வந்தால், பாதிப்புள்ள பகுதியில், ஊசி வழியாக வலைப்பின்னல் (sented craft)
ஒன்றை பொருத்தி, ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்து, மேலும் வீக்கம் அடையாத
வகையில் சீரமைக்கலாம்.
4. நரம்பு சுருள்வது எதனால் ஏற்படுகிறது; இந்த பாதிப்பு எல்லாருக்கும் வருமா?
அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் சிரையில், நிறைய வால்வுகள்
உள்ளன. இந்த வால்வுகள் பழுதடைந்தால், வீக்கம் ஏற்படும். ரத்தக்குழாய்கள்
வளையும். நரம்பு சுருள் (வெரிஸ்கோ வெய்ன்) வரும். நீண்ட நேரம் நின்று வேலை
செய்வோர், அதாவது போலீஸ், ராணுவ வீரர்கள், முடி திருத்துவோர், மளிகைக்
கடைகளில் வேலை செய்வோருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் வரலாம். கணுக்கால்
கருப்பாகி, அரிப்பு ஏற்படும், புண் உண்டாகும். ரத்தப்போக்கும் ஏற்பட
வாய்ப்புள்ளது.
5. பாதிப்புக்கு என்ன காரணம்; மரபு சார்ந்த நோயா?
பல கட்ட ஆராய்ச்சிகள் நடந்தும், சரியான காரணத்தை கண்டறிய முடியவில்லை. மரபு
ரீதியாக வரலாம்; அதிக நேரம் நின்று வேலை செய்வோர், அதிக உயரம் உள்ளோருக்கும்
இதுபோன்ற பாதிப்புகள் வரலாம். பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதை இரண்டு வகையாக சொல்கின்றனர். ஒன்று, காரணம் இல்லாமல் வருவது. இதற்கு
சிகிச்சை அளிக்க முடியும். இரண்டாவது வகை, ஏதேனும் காரணங்களால் வருவது.
'டாப்ளர்' பரிசோதனை மூலம் கண்டறியலாம். கால்களில் வீக்கம் ஏற்படுதல்,
கால்களில் நரம்புகள் சுருண்டு காணப்படும். இவற்றை மருந்து, மாத்திரைகளால்
குணப்படுத்த முடியாது.
6. இதற்கு அறுவை சிகிச்சைதான் தீர்வா?; நவீன வசதிகள் உள்ளதா?
தசைகளுக்கு நடுவே உள்ள ரத்தக்குழாய்களில் (டீப் வெய்ன்) பிரச்னை இருந்தால்,
சிகிச்சை சாத்தியமில்லை. அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றுவதுதான் நடைமுறை.
மருத்துவத்துறை வளர்ச்சியால், லேசர் சிகிச்சை, ஆர்.எப்.ஏ., (ரேடியோ
பிரிக்வென்சி அபலேசன்) மூலமும், எளிதாக குணப்படுத்த முடியும். இது தவிர,
'போம்' கிளிரோ தெரபி என்ற, நவீன சிகிச்சை முறையும் உள்ளது.
சாதாரண அறுவை சிகிச்சையில், முழுவதும் மயக்கம் தர வேண்டும்; வலி இருக்கும்.
ஒரு மாதம் ஓய்வில் இருக்க வேண்டும். நவீன சிகிச்சை முறையில், குறித்த இடத்தில்
மட்டும் மயக்கம் கொடுத்தால் போதும்; வலி இருக்காது. ஒரே நாளில் வீடு
திரும்பலாம். மூன்றாம் நாள், வேலைக்கு போக முடியும். பெரிய அரசு
மருத்துவமனைகளிலும், இந்த நவீன வசதிகள் உள்ளன.
7. அலட்சியம் காட்டினால், உயிரிழப்புக்கு வழி வகுத்து விடும் என்று,
கூறப்படுகிறதே?
கால் வீக்கத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ரத்தக்குழாயில் உள்ள கட்டி,
இதயத்தை அடைத்துக் கொண்டு, நுரையீல் செல்லும் ரத்தக்குழாய் வரை பாதிக்கும்
என்பதால், சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும். அலட்சியம் காட்டினால் உயிரிழப்பு
ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது நல்லது.
8. பாதிப்பு அதிகமானால் என்ன செய்ய வேண்டும்?
கால் பெரிதாக வீங்கி, அதிக வலி இருந்தால், 'பெட் ரெஸ்ட்' எடுக்க வேண்டும்;
நடக்கக்கூடாது. கால்களை உயரமாக தூக்கி வைக்க வேண்டும். ரத்தம் உறையாமல் இருக்க
தேவையான மருந்து, மாத்திரைகள் தர வேண்டும்.ஒரு வாரத்திற்குப்பின், 'கிரிப்'
போட்டுக் கொண்டோ, ஸ்பெஷல் சாக்ஸ் போட்டுக் கொண்டோ நடக்கலாம். டாக்டரின் ஆலோசனை
பெற்று, ஆறு மாதங்கள் மாத்திரைகளை தொடர்ந்தால், குணமாகிவிடும்.
ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளித்தால், முற்றிலும்
குணப்படுத்தலாம். தாமதமாக சிகிச்சை எடுத்தால், முற்றிலும் குணமடைந்து கால்
பழைய நிலைக்கு திரும்பும் என, எதிர்பார்க்க முடியாது.
9. அப்படியும் சரியாகவில்லை என்றால் என்ன செய்வது?
தொடர் சிகிச்சை அளித்தும், முன்னேற்றம் இல்லை என்றால், 'டாப்ளர்' உதவியுடன்,
ஒரு குழாயை முட்டிக்குப்பின் உள்ள ரத்தக்குழாயில் செலுத்தி, அதன் வழியாக
மருந்து செலுத்தி (திராம்போ லைட்டிங் தெரபி) ரத்தக் கட்டிகளை கரைக்கலாம்.
அப்படி செய்யும்போது, மெயின் சிரையில், தற்காலிகமாக, பில்டர் பொருத்துவது
நல்லது. மொத்தத்தில், கால்களில் வீக்கம், நரம்புகளில் சுருக்கம் இருந்தால்,
அலட்சியம் காட்டாமல், உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்வதே சிறந்தது.
[