முகப்பரு வடு நீக்க வெந்தயமே சிறந்தது.
வயிறு எரிச்சல் மற்றும் உடல் சூட்டை தணிக்கும், அரிய வகை மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது. முகப்பருவை போக்கவும், கருமையான கூந்தலை பெறவும் பயன்படுகிறது. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நன்றாக வளரும். பொடுகு தொல்லையும் இருக்காது.
முகத்தில் உள்ள பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் இருந்த இடத்தில் உள்ள வடுக்கள் பலருக்கு மாறாமல் இருக்கும். இத்தழும்புகள், நம் அழகான தோற்றத்தை கெடுத்துவிடும். இதை போக்க, சிறந்த மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயம் முகப்பரு தழும்பை மட்டும் நீக்குவதில்லை; முகத்தின் தோற்றத்தையும் பொலிவுடையதாக மாற்றும் சக்தி உடையது.
எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து, அதை முகப்பருக்கள் மீது தடவினால் மென்மையாக மாறும். எலுமிச்சை சாற்றின் சக்தியால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும். ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து, முகத்தில் தடவினால், பருக்கள் உதிர்ந்து தழும்புகள் மறையும். திரும்ப பருக்கள் வருவதை தடுக்கும். வென்னீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து அரைத்து, குளிர்ந்த பின், தழும்பு உள்ள இடத்தில் தடவி, 20 30 நிமிடம் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும்.
வெந்தயத்தை ஊற வைத்து விழுது போல் அரைத்து, முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம். தழும்புகளின் மீது தடவி, அவற்றை நீக்கினால் நல்ல பலன் கிடைக்கும். பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி, அதை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கி, முகம் அழகாக மென்மையாக இருக்கும். இயற்கையான இந்த வைத்திய முறையால், வேறு எந்த பக்க விளையும் ஏற்படாது.
Xxxx
மருக்கள்/ கரும்புள்ளிகள்/ தழும்புகளை குணமாக்கும் வெந்தயம்!
வெந்தயத்தை இரவு முழுவதும் நீர்விட்டு ஊற வைத்து காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலை முடிக்கும் தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்கு குளிக்க பொடுகுகள் போகும்.
வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலையில் முகத்துக்கு தடவி வைத்திருந்து குளித்து விடுவதால் முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து போகும். முகப்பருக்களும் குணமாகும்.
வெந்தயத்தோடு தேன் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வைத்திருந்து இளஞ்சூடான நீரில் கழுவி வர முகப்பருக்கள் குணமாகும்.
வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனோடு 4 கப் நீர் ஊற்றி அடுப்பிலிட்டு 15 நிமிடங்கள் காய்ச்சி எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தினம் 2 முறை முகத்தைக் கழுவுவதற்கு உபயோகித்தால் முகத்துக்கு நல்ல வனப்பையும், சுருக்கங்களை நீக்கி நல்ல மென்மையும் பொன் வண்ணத்தையும் தரும்.
முடி கொட்டுகிற பிரச்சனைக்கு வெந்தயம் மிகச் சிறந்த நிவாரணி.
முடி கொட்டுதல், பொடுகு, தலை வழுக்கை, முடி மெல்லியதாக ஆகுதல் ஆகியவற்றுக்கு வெந்தயத்தை தாராளமாக உணவில் சேர்த்து கொள்வதோடு ஊறவைத்து அரைத்து தலைக்கு தடவி வைத்திருந்து குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
வெந்தயம் இளநரையையும் போக்ககூடிய நன்மருந்தாகும்.
கைப்பிடி அளவு வெந்தயத்தை 300மி.லி தேங்காய் எண்ணெயில் இட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி இளஞ்சூட்டோடு தலைக்குத் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வர இளநரையைத் தடுத்து நிறுத்தும்.
எண்ணெய் இரவு முழுவதும் தலையில் ஊறும்படி வைத்திருந்து காலையில்குளிக்க வேண்டும்.