Thursday, January 10, 2019

ஆங்கில மருத்துவம் பற்றி மகாத்மா காந்தி

ஒரு நூலாசிரியர், இக்கால வைத்திய முறை முழுவதையும் உபாஸ் மரத்திற்கு ஒப்பிட்டிருக்கிறார். பிறரை உறிஞ்சி வாழும் வக்கீல் தொழிலையும், வைத்தியத் தொழிலையும் அம்மரத்தின் கிளைகளோடு ஒப்பிட்டிருக்கிறார்.

உபாஸ் என்பது, ஜாவா பகுதியிலுள்ள ஒரு நச்சுமரம். அதில் வரும் பாலை எடுத்து காட்டு மக்கள் அம்புகளின் முனையில் தடவுவார்கள். அந்த அம்புபட்டவர்கள் கட்டாயம் இறந்து போவார்கள். அதன் நிழலில் எந்தச் செடியும் நசிந்து போகும். அவ்வளவு கொடியது அம்மரத்தின் விஷம்.

வைத்தியத் தொழிலைக் குறித்து எனக்கு ஒரு சமயம் ஆர்வம் இருந்தது. நாட்டின் நன்மைக்காக ஒரு டாக்டராக வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். அந்த எண்ணம் இப்போது எனக்கு கிடையாது.

நம் வைத்தியர்கள் ஏன் கௌரவமான அந்தஸ்தை அடைவதில்லை என்பதை நான் இப்போது அறிகிறேன். நம்மை அடிமைகளாக வைத்திருப்பதற்கு ஆங்கிலேயர்கள், வைத்தியத் தொழிலை சரியானபடி உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நம்மை முற்றிலும் நிலை தவறி போகும்படி செய்து விட்டனர்.

நம் உடம்பைப் பற்றி, நாம் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. கெட்ட செயல்களில் ஈடுபட்டு விட்டோம். இதனால், நமக்கு நோய் ஏற்படுகிறது. நம்மை ஆதரிக்கும் வகையில் டாக்டர்கள் மருந்து மாத்திரைகள் கொடுத்து உதவி செய்வதால்தான் மீண்டும், மீண்டும் அதுபோன்ற கெட்ட செயல்களில் ஈடுபட்டு மருந்தை உட்கொண்டதன் மூலமாக உடல் சிரமமின்றி இருந்தாலும், மனம் பலவீனப்பட்டு விடுவதால், அதனை அடக்கும் திறனை இழந்து விடுகிறோம்.

இவர்கள் மருந்து மாத்திரைகள் கொடுத்து உதவவில்லை என்றால், இயற்கை தன்னுடைய வேலையைச் செய்யும். ஆதலால், அதற்கான தண்டனையை அனுபவிப்போம். இதனால், நம்மை நாமே அடக்கியாளும் ஆற்றலும் கிடைத்து, கெட்ட காரியங்களில் இருந்து விடுபட்டு ஆனந்தமாய் இருந்திருப்போம்.

இவர்கள் உபயோகிக்கும் மருந்துகள் பலவற்றில் மிருகக் கொழுப்போ அல்லது மதுத்திரவங்களோ கலந்திருக்கின்றன. பா(ப, வ)ங்களைப் பரப்பும் ஸ்தாபனங்களே ஆஸ்பத்திரிகள்.

நாம் நாகரீகம் அடைந்திருப்பதாக பாசாங்கு செய்து, தடுக்கப்பட்டிருப்பவைகளை மூட நம்பிக்கைகள் என்று புறங்கூறி, நமக்கு இஷ்டமானவைகளில் ஈடுபட டாக்டர்கள் தூண்டுகிறார்கள். இதனால், நமக்குள்ள புலன்களை அடக்கும் ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது. ஆண்மையற்றவர்களாகவும் ஆகி விடுவதால், நாட்டிற்கு தொண்டு செய்ய தகுதியற்றவர்கள் ஆகிறோம்.

ஆங்கில வைத்திய முறையை கற்றுக் கொள்வது, நமது அடிமைத்தனத்தை பலப்படுத்துவதாகும். இம்மருத்துவம் மனித வர்க்கத்திற்கு சேவை செய்வதற்காக அன்று. மாறாக, கௌரவம் மற்றும் செல்வம் சேர்ப்பதற்காகவே என்பதால், நமக்குத் தீமையே.

ஆங்கில மருத்துவர்கள் தங்களை அறிவு மிக்கவர்கள் என்பது போல் காட்டி, ரூபாய் கணக்கில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கின்றனர். அம்மருந்துகள் உண்மையில் சில தம்படிகளே (ஒரு ரூபாய்க்கு 192 பைசாக்கள். ஆகையால், தம்படிக்கு சில நயா பைசாக்கள் என்று பொருள்) பெறுமானவை.

ஆனாலும் நீங்களோ, உங்களின் அறியாமையினாலும், ஏதோ நோய் நீங்கும் என்ற நம்பிக்கையினாலும், உங்களை ஏமாற்ற வாய்ப்பு தருகிறீர்கள். எல்லோரிலும் படுமோசமானவர்கள் ஆங்கில மருத்துவர்கள்.

பெரிய பட்டங்களை பெற்ற டாக்டர்களை விட, போலி வைத்தியர்களே மேல் என்று சில சமயங்களில் எண்ணுகிறேன். மனித வர்க்கத்திடம் அன்பு காட்டுவது போன்று வேஷம் போடும் டாக்டர்களை விட, நாம் நன்கு அறிந்த அரைகுறை வைத்தியர்களே மேல் அல்லவா?

மகாத்மா காந்தி 1909 ஆம் ஆண்டில், தனது 40 வது வயதில் எழுதிய இந்திய சுயராஜ்யம் நூலின் 12 வது கட்டுரையில் இருந்து கருத்து மாறாமல், தேவைக்கு ஏற்ப சுருக்கி ஒருங்கிணைத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...