காய்ச்சல் குறைய அதிமதுரம் மற்றும் வசம்பை எடுத்து சிறிது தட்டி நீர் விட்டு நன்றாக சுண்ட காய்ச்சி காலை, மாலை குடித்து வந்தால் காய்ச்சல், இருமல் மற்றும் காய்ச்சல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறையும்.
காய்ச்சல் குறைய பாகலிலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் ஒரு அவுன்ஸ் எடுத்து அதில் சிறிது வறுத்து பொடி செய்த சீரகப் பொடியை கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் விஷக் காய்ச்சல் குறையும்..
கரும்புள்ளிகள் குறைய சிறிதளவு கடலை மாவை பால் ஏட்டுடன் கலந்து குழைத்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக முகத்தில் பூசி வைத்திருக்க வேண்டும். பின்பு காலையில் எழுந்ததும் பயிற்றம் மாவை முகத்தில் தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல் ஆகியவைகள் குறையும்.
முகம் பொலிவு பெற எலுமிச்சை சாறு பிழிந்து ஆவியை முகத்தில் பிடித்தால் முகம் பொலிவு பெறும்.
வாய்கிரந்தி குறைய திப்பிலி, சுக்கு, கடுக்காய், பருத்தி வேர், கிரந்திநாயகம் வேர், நன்னாரி வேர், கண்டங்கத்திரி வேர், பெருமரத்துப்பட்டை, வேப்பம் பட்டை ஆகிய பொருட்களை எடுத்து சுத்தம் செய்து ஒரு கல்வத்தில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும். ஒரு மண் சட்டியில் சிற்றாமணக்கு எண்ணெயை ஊற்றி அதில் இடித்த பொருட்களை போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும். பின்பு அதை இறக்கி ஆற வைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரப்படுத்தவேண்டும். காலை ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாய்கிரந்தி குறையும்.