மாப்பிள்ளை சம்பா:பழங்காலத்தில் ஒருவனுக்கு பெண் கொடுப்பதற்கு முன்னர் அவர் பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வேண்டும்.
இந்த ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்குவார்களாம். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் ஏற்பட்டதாம்.
புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது.
இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும்.
ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்
இதன் அரிசியை வேகவைக்கும்போது வடிக்கும் கஞ்சியில் மிளகு, சீரகம், உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் கிடைக்கும் ருசியே தனிதான். ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் வழங்கப்படும் சூப் வகைகளிலும்கூட இந்தச் சுவை கிடைக்காது என்று சொல்லலாம். கஞ்சியே இவ்வளவு ருசி என்றால், சோறு எவ்வளவு சுவையாக இருக்கும்?
உடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உண்டு.
இதற்கெல்லாம் மேலாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய, பல மருத்துவக் குணங்கள் இந்த அரிசியில் உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த உணவே மருந்து.
எப்படி உபயோகபடுத்தலாம்.
மாப்பிள்ளை சம்பா நீராகாரம்
மாப்பிள்ளை சம்பா அரிசி-¼ கிண்ணம், மோர்-கொஞ்சம், சின்னவெங்காயம்-5, உப்பு-தேவையான அளவு.
பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும். நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும். காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும். காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் மேலும் நாம் தினம் உண்ணும் இட்லி, தோசை போன்றவைகளும், கலவை சாதம், சாம்பார் சாதம் போன்றவைகள் செய்தும் உண்ணலாம். மேலும் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடியவாறு இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை போன்றவை செய்து சாப்பிடலாம்.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும், துத்தநாக சத்தும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உட்கொள்ளும் போது உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள் கறைத்து உடல் எடை குறைக்கிறது இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.
இதில் உள்ள அதிகபடியான நார்சத்துகள் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. இயற்கை விவசாய முறையில் தற்போது பாரம்பரிய தன்மை மாறாத மாப்பிள்ளை சம்பா அரிசி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. எனவே ஆரோக்கியத்திற்கும், உடல் பலத்திற்கும் உதவும் மாப்பிள்ளைசம்பா அரிசியை உணவில் பயன்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்.