* குடும்பத்தினர் இன்சுலின் ஊசி போட கற்றுக் கொள்ள வேண்டும்
* குளுக்கோ மீட்டரைப் பயன்படுத்த தெரிய வேண்டும்
‘சர்க்கரை நோயாளிகளுக்கு உணவில் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம்’’
டாக்டர் ஏ. பன்னீர்செல்வம் அறிவுரை
உலக சர்க்கரை நோய் கூட்டமைப்பு, இந்த ஆண்டு உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, சர்க்கரை நோயாளிகளை குடும்பத்தினர் அவரது உணவு உட்கொள்ளும் முறை, உடற்பயிற்சி செய்தல், மருந்து உட்கொள்ளுதலை அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும் என அறிவித்தியுள்ளது என்று சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவனை அருணா நீரிழிவு மையம் சேர்மன் டாக்டர் ஏ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பன்னாட்டு சர்க்கரை நோய் கூட்டமைப்பு, இந்த ஆண்டு சர்க்கரை நோயயைப் பற்றி விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு: சர்க்கரை நோயும் – குடும்பமும்.
கடந்த 1991 முதல் பன்னாட்டு நீரிழிவு நோய்க் குழுமம் பல்வேறு தலைப்புகளில் கடந்த 28 ஆண்டுகளாக உலக மக்களிடையே பலவித தலைப்புகளில் இந்நோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக. கதவல் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கம் அதிகமானதால் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், தகவல்களைப் பரிமாரிக் கொள்வதிலும் மிகவேக முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால் சர்க்கரை நோயின் தாக்கமும் அதன் பின் விளைவுகளும் குறைந்தபாடில்லை.
ஆகவே இந்த ஆண்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்நோய் பற்றி தெரிந்திருத்தல் வேண்டும். ஏனெனில் உணவு முறையை எடுத்துக்கொண்டால் குடும்ப உறுப்பினரே சில பண்டிகை நாட்களிலும் மற்றும் சில முக்கிய நாட்களிலும் அவர்களை இனிப்புகளை சாப்பிட செய்வதால் உணவு முறைகளின் முக்கியத்துவத்தை அறியாமல், சர்க்கரை சத்து, கொழுப்புச் சத்து, உப்பு அதிகமுள்ள உணவு வகைகளை அடிக்கடி உண்டால் உடற்பயிற்சி செய்தாலும், மாத்திரைகள் சாப்பிட்டாலும், இன்சுலின் ஊசி போட்டாலும் இந்நோய் கட்டுப்பாட்டிற்குள் வருவதில்லை.
மேலும் சிகிச்சைகள் எடுத்தும் இந்நோயின் பலவித இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. சில நேரங்களில் சர்க்கரைக்குப் பதிலாக காபி, டீ போன்ற பானங்களில் கருப்பட்டி, நாட்டு சர்க்கரை, வெல்லம் போட்டு சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் ஏறாது என்ற தவறான கருத்தில் அநேக குடும்ப உறுப்பினர்களும் மற்றவர்களும் உள்ளனர்.
இது முற்றிலும் தவறு. இவைகளின் மூலமும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். இதையும் உணராமல் நிறைய குடும்ப உறுப்பினர்களும், மற்றவர்களும் பழங்களை அடிக்கடி உண்ணச் செய்வதாலும் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் வருவதில்லை.
காய்கறி, கீரை சாப்பிடலாம்
இனிப்பு குறைவான பழங்களைக் கூட திட்டமாக மருத்துவர் அறிவுரைப்படி சாப்பிடுவது நல்லது. காய்கறி, கீரைகளை அளவில்லாமல் உண்ணலாம். பட்டாணி, பொட்டுக்கடலை, சுண்டல் வகைகளை அளவில்லாமல் சாப்பிடலாம். பெரும்பாலான நேரங்களில் குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும், நண்பர்களும் உணவு முறையின் முக்கியத்துவத்தை உணராமல் தவறுதலாக இவர்களை வழி நடத்தி விடுகின்றனர். பல நேரங்களில் ஆபத்தில் முடிகிறது.
இதுபோல் உடற்பயிற்சியும் மிக முக்கியமான ஒன்று. அன்றாடம் அரை மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்காவது உடற்பயிற்சி செய்வது அவசியம். நடைபயிற்சி அல்லது ஒரு உடற்பயிற்சி நல்லது. யோகா, தியானமும் உடற்பயிற்சியுடன் சேர்ந்து செய்வது நல்லது. இவைகளின் மூலமும் இந்நோய் தடுக்கப்படுகிறது. வந்தபின் நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. குடும்ப உறுப்பினர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரை உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அன்றாடம் அதை அனுசரிக்கச் செய்ய உறுதுணையாக இருக்க வேண்டும்.
தவறாமல் மருந்து மாத்திரை
பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை தவறாமல் இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் எடுத்துக் கொள்ள குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மாத்திரைகள் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே திரும்பவும் மாத்திரைகளோ, ஊசி மருந்தோ வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பல நாட்கள் மாத்திரைகளையோ இன்சுலின் ஊசியோ போட்டுக் கொள்ளவில்லையெனில் இந்நோய் மீண்டும் கட்டுப்பாட்டை இழக்கிறது. பல இன்னல்களை ஏற்படுத்துகிறது. அதுவும் இந்நோயால் பாதிக்கப்பட்டோர் வயதானவர்களாய் இருந்தால் குடும்ப உறுப்பினர்களின் கவனம் மேலும் தேவைப்படுகிறது.
குழந்தை பாதிக்கப்பட்டிருந்தால்...
இன்சுலின் ஊசி தேவைப்படின், பாதிக்கப்பட்டவர் குழந்தையாய் இருந்தால், குழந்தையின் அப்பா அல்லது அம்மா இன்சுலின் ஊசி போட கற்றுக் கொள்வது நல்லது. ஒவ்வொரு முறையும் குழந்தையை மருத்துவமனைக்கு ஊசிக்காக எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும் பாதிக்கப்பட்டவர் வயதானவராய் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் இன்சுலின் ஊசி போடக் கற்றுக்கொள்வது நல்லது. தற்போது முன்பே சுத்தப்படுத்தப்பட்டு பாதுகாப்பான பிளாஸ்டிக் சிரஞ்சுகள் பல ஆண்டுகளாக உபயோகத்தில் உள்ளன. இவை மூலம் இன்சுலின் ஊசியை குடும்ப உறுப்பினர்கள் கொடக்கலாம். மேலும் பேனா வடிவிலும் தற்போது இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்ளும் முறை சில ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இவைகளின் மூலமும் குடும்ப உறுப்பினர்கள் இன்சுலின் ஊசியை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் போட்டு விடலாம்.
தாழ்சர்க்கரை நிலை சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 70மில்லிக்கு குறைவாக சென்று விடுவதை தாழ் சர்க்கரை நிலை என்கிறோம். இதைக் கண்டுபிடிப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன் சிரமம். தற்போது குளுக்கோ மீட்டர்கள் உபயோகத்தில் உள்ளன. இவைகளின் மூலம் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை தெரிந்து கொள்வது மிகவும் சுலபம். ஒரு துளிக்கு குறைவான ரத்தத்தில் 5 மணி துளிகள் தாழ்சர்க்கரை நிலையை குடும்ப உறுப்பினரே கண்டுபிடித்து உடனே குளுக்கோஸ் (அ) சர்க்கரை கலந்து நீரை கொடுத்தால் இது சரியாகிவிடும். இல்லையேல் மருத்துவமனையில் சேரவேண்டிய நிலை ஏற்படும்.
நினைவிழந்த நிலைக்கு போனால்...
இந்நோயால் பாதிக்கப்பட்டோர் நினைவிழந்த நிலைக்குச் சென்றால் குடும்ப உறுப்பினர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சில நேரங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைவதாலும் மற்ற நேரங்களில் சர்க்கரையின் அளவு மிகவும் அதிகம் இருப்பதாலும் நினைவிழந்த நிலை ஏற்படும். தக்க சிகிச்சை உடனே அளித்தால் குணமாகிவிடுவர். காலதாமதமானால் குணமாவதில் சிரமம் ஏற்படும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு பக்கவாதம் ஏற்பட்டாலோ, பார்வை கோளாறு ஏற்பட்டாலோ, இருதய கோளாறு ஏற்பட்டாலோ, சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டாலோ அல்லது கால்களை இழந்தாலோ குடும்ப உறுப்பினர்களின் கவனிப்பு மேலும் தேவைப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் உதவியில்லாமல் இதுபோன்ற சூழ்நிலைகளில் தற்போது நிறைய சர்க்கரை நோயாளர்கள் சிரமப்படுகின்றனர். ஆகவே இந்த நோய் வராமல் தடுப்பது நல்லது. வந்தபின் நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருந்து இந்நோயின் பின் விளைவுகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் அனுசரிக்கும் உணவு முறைகளையும், உடற்பயிற்சியையும் இந்த நோய் பாதிக்கப்படாதவரும் அனுசரிக்கலாம். இந்த முயற்சிகள் சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும். இந்த நோய் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களின் 30 வயதை கடந்தவராய் இருப்பின் நீங்கள் ஆண்டுக்கு ஒரு முறை இந்த நோய் பரிசோதனை செய்து வராமல் இருக்கிறதா அல்லது ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துள்ளோமோ என்று தெரிந்து கொண்டு தக்க தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவர் மூலம் எடுத்துக் கொள்வது நல்லது.
இது பற்றிய அறிய 044 2374 4252, 044 2375 5969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
*┈┉━•★ⓂGULFNEWS★•━┅┉┈*