Tuesday, September 6, 2016

  *சிறுதானிய அரசி*

அன்று ஏழைகளின் உணவாக கருதப்பட்ட சிறுதானியங்கள், இன்று பலரும் நோய்களுக்கு பயந்து சாப்பிடும் உணவாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அவை நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடும் அத்தனை சாராம்சங்களையும் உள்ளடக்கியவையாக இருக்கின்றன. அதனால் நிறைய பேர் சிறுதானியங்களுடன் புது உறவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவைகள் மீது தங்களுடைய பிரியத்தை புதுப்பித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை பிரபலப்படுத்தும் சீரிய முயற்சிகளில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திருவையாறு ராஜேஸ்வரி.


இவருடைய முயற்சி பலருடைய உணவு பழக்க வழக்கத்தையே மாற்றி விட்டதுடன், அவர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொண்டிருக்கிறது. துரித உணவுகளுக்கு அடிமையாகி கிடந்தவர்களை, இவர் சிறுதானிய உணவுகள் மீது மோகம் கொள்ள வைத்துவிட்டார். 10–ம் வகுப்பு வரையே படித்திருக்கும் ராஜேஸ்வரி, சிறுதானிய உணவுகளை பிரபலப்படுத்தும் நோக்கில் அதற்கான நிறுவனத்தை தொடங்கி நடத்துகிறார். அதன் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுக்கிறார். இயற்கை சார்ந்த இவரது முயற்சியையும், வளர்ச்சியையும், விழிப்புணர்ச்சியையும் பாராட்டி மத்திய அரசும் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
தன்னை பற்றியும், சிறுதானிய உணவுகள் பற்றியும் ராஜேஸ்வரி தரும் தகவல்கள்!
‘‘நான் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரியில் பிறந்தேன். எனக்கு சிறு வயதில் இருந்தே புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. மேல்நிலைப்படிப்பு படிக்க எங்கள் ஊரில் வசதி இல்லாததால் 10–ம் வகுப்புடன் படிப்பு தடைபட்டு போனது. கல்விப் பயணம் முடிவுக்கு வந்தாலும் வாசிக்கும் திறனை மட்டும் கைவிடவில்லை. ஓய்வு நேரங்களில் ஏதாவது புத்தகங்களை படித்து கொண்டே இருப்பேன். நான் படித்த புத்தகங்களில் சிறு தானியங்களை பற்றிய புத்தகங்கள் என்னை கவர்ந்தன. அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கியங்கள் என்னை வியக்கவைத்தன. அதனால் சிறுதானிய உணவுகளை சமைக்கத் தொடங்கினேன்’’ என்கிறார்.
ராஜேஸ்வரி சிறுதானியங்களை பயன்படுத்தி விதவிதமாக சமைப்பதற்கு பழகிக்கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. இவருடைய கணவர் ரவிக்குமார் சோப்பு விற்கும் ஏஜென்சி நடத்தி வருகிறார். கணவருடைய தொழில் மூலமே சிறுதானியங்களை பற்றிய விழிப்புணர்வை விதைத்திருக்கிறார்.
‘‘என்னுடைய சமையலில் சிறுதானிய உணவுகளை இடம்பெற செய்தேன். என் கணவர் அவைகளை விரும்பி சாப்பிட்டார். அவைகளில் புதிய உணவுகளை தயார் செய்வதற்கும் ஊக்கப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கமே என்னுடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது. தொழில்ரீதியாக அவரை சந்திப்பதற்கு நிறைய பேர் வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்கு சிறுதானியங்களை கொண்டு சமைத்த உணவு களை சாப்பிட கொடுத்ததுடன், அதன் நன்மைகள் பற்றியும் எடுத்து கூறினேன். அவர்கள் சிறப்பினை அறிந்து வாங்கத் தொடங்கினார்கள். அப்படியே இந்த உணவு பிரபலமாகிவிட்டது’’ என்கிறார்.
இவர் சிறு தானியங்களில் இருந்து கஞ்சி மிக்ஸ், பொங்கல் மிக்ஸ், கார அடை மிக்ஸ், புட்டு மாவு, வெந்தய தோசை மிக்ஸ், முறுக்கு மாவு, சிவப்பரிசி புட்டு மாவு, உப்புமா குருணை, ஊட்டச்சத்து மாவு, முளை கட்டப்பட்ட தினை மாவு, முளை  கட்டப்பட்ட ராகி மாவு, கம்பு மாவு, கொள்ளு மாவு, கொள்ளு ரசப்பொடி, வரகு தோசை மிக்ஸ், உப்புமா குருணை போன்ற விதவிதமான உணவுப் பொருட்களை தயார் செய்கிறார்.
சிறுதானியங்கள் குறித்தும், அவைகளில் அடங்கியிருக்கும் அளப்பெரிய நன்மைகள் பற்றியும் ராஜேஸ்வரி பட்டியலிடுகிறார்:
‘‘சிறுதானியம் என்பது வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் என வடிவத்தில் சிறியதாக இருக்கும் தானிய வகைகளை குறிக்கும். இந்த சிறுதானியங்கள் பழந்தமிழர்களின் உணவில் பெரும் பங்கு வகித்திருக்கிறது. நம் முன்னோர்கள் அதனை உட்கொண்டதால்தான் மிகுந்த ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள்.
‘உணவே மருந்து’ என்ற அவர்களின் வாக்கு இன்று ‘மருந்தே  உணவு’ என தடம்மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் மாறி வரும் உணவுப்பழக்கம் தான். பாஸ்ட்புட் கலாசாரம் பெருகிவிட்டது. இதுவே பல்வேறு நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. நாம் வியாதிகளில் இருந்து விடுபட்டு உடல் நலனை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும். நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சிறுதானியங்கள் தருகின்றன.
தினை, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்புச்சத்து குறையும். உடல் பருமனை குறைக்கும். சிறுநீரக கோளாறு தொந்தரவுகள் ஏற்படாது. பெண்களுக்கு ஏற்படும்  மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக சிறுதானியங்கள் அமைகின்றன.
அதேபோல தாய்ப்பாலை அதிகரிக்கவும், கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக வாழவும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நன்றாக இருக்கவும், மலச்சிக்கலை சரி  செய்யவும், வயிற்றுப்புண்ணை குணப்படுத்தவும் சிறுதானியங்கள் உதவுகின்றன’’ என்று விளக்கியவர், தனக்கு மத்திய அரசின் விருது கிடைத்ததற்கான காரணத்தையும் விளக்குகிறார்.
‘‘நான் பரமக்குடி, தேனி, மதுரை, ஈரோடு, அரியலூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்களை வாங்கி வருகிறேன். அவைகளை மக்கள் விரும்பி சாப்பிட்டால், விவசாயிகள் விளைச்சலை அதிகப்படுத்துவார்கள். அதன் மூலம் விலை குறையும். இயற்கை கொடுத்த பாரம்பரிய உணவு தானியங்களை பாதுகாக்க வேண்டியது நம்முடைய  பொறுப்பு.
இயற்கை வளங்களை பாதுகாப்பவர்களுக்கு மத்திய அரசு விருது வழங்குகிறது. நான் இயற்கை கொடுத்த கொடையான பாரம்பரிய  உணவுகளுக்கு புத்துணர்வு கொடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறேன். அதனால் சிறு தானியங்களை கொண்டு தயாரித்த உணவுப்பொருட் களை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தேன். அதில், இந்த உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிட்டு இருந்தேன். என்னுடைய விழிப்புணர்வு சேவையை பாராட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் ‘‘ஸ்ருஸ்டி சம்மான்’’ என்ற விருதினை மத்திய அரசு வழங்கியது. இந்த விருது என்னுடைய விடாமுயற்சிக்கும், உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியாகும்’’ என்கிறார், இந்த சிறு   தானிய அரசி.
ராஜேஸ்வரி– ரவிகுமார் தம்பதியருக்கு பபிதா, சபிதா என இரு மகள்கள். பபிதா பல் டாக்டர். சபிதா என்ஜினீயரிங் படித்தவர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. ஆரோக்கிய பெட்டகம்சிறுதானிய  உணவுகளின்  சிறப்புகள்:
* கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்ற சிறுதானிய வகைகளை சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன், இதய நோய் போன்ற நோய்கள் ஏற்படாது.
* கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சம நிலையில் வைத்திருக்க உதவும். தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கும். தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை பெருக்கும். உடல் வலிமையை அதிகரிக்கும்.
* கம்பில் அரிசியை விட 8 மடங்கு இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இதில் போலிக் அமிலமும் அதிகமாக நிறைந்துள்ளதால் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்த உணவாகும். மக்னீசியம்,  துத்தநாகம் ஆகிய தாது உப்புகளும் கம்பில் உள்ளன. கம்பில் கூழ், அடை, புட்டு, சேமியா, சூப் போன்ற உணவு  பதார்த்தங்களை செய்து சாப்பிடலாம்.
* சோளத்தில் புரதம், இரும்பு, கால்சியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லவை. உடல் பருமனை குறைக்கும். வயிற்று புண்ணை ஆற்றும். வாய் துர்நாற்றத்தை போக்கும். இதில் புட்டு, தோசை, அடை போன்றவற்றை தயாரிக்கலாம்.
* வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச்சத்து இருக்கிறது. இது உடல் எடையை குறைப்பதற்கு துணைபுரியும். மாதவிடாய் பிரச்சினை சமயங்களில் பெண்கள்  வரகை சமைத்து சாப்பிடுவது நல்லது.
* தானியங்களில் அதிக சத்து மிக்கவை கேழ்வரகு. இதில் புரதம், தாது, உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர் சத்துக்களும் இருக்கின்றன. இது  உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களை சாப்பிடலாம்.  கேழ்வரகை கொண்டு ராகி மால்ட் தயாரிக்கிறார்கள். 
* சாமையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. சாமையில் சாதம், புலாவ், பொங்கல், இட்லி போன்றவை செய்யலாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...