இந்தியாவில் இணையதள வேகத்தை அதிகரிக்கக் கூடிய ஜிசாட் 11 செயற்கைக்கோள் : நாளை மறுநாள் விண்ணில் பாயகிறது
பெங்களூரு : இந்தியாவில் இணையதள வேகத்தை அதிகரிக்கக் கூடியதும் இதுவரை இல்லாத அதிக எடை கொண்டதுமான செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை மறுநாள் விண்ணில் செலுத்த உள்ளது. பிரஞ்சு கயானாவில் இருக்கும் ஏவுதளத்தில் இருந்து 5.9 டன் எடை கொண்ட ஜிசாட் 11 என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைகோள் மூலமாக இணையதள வேகம் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜிசாட் 11 ஆனது 5700 கிலோ எடைக் கொண்டது என்பதால் இதை இந்தியாவில் இருந்து ஏவ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6எ செயற்கைகோள் கண்காணிப்பு வளையத்தில் இருந்து பிரிந்து போனது. இதன் காரணமாக ஜிசாட் 11 செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் நாள் தள்ளிப் போனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜூன் மாதம் விண்ணில் ஏவப்பட இருந்த ஜிசாட் 11 செயற்கைகோளை தென்அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் இருந்து திரும்ப பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் அதில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கருவிகளையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்தனர்.
மறு ஆய்வு முடிந்த நிலையில் ஜிசாட் 11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதற்கு தகுதியான நிலையில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்தது.இதனையடுத்து ஜிசாட் 11 செயற்கைக்கோளை மீண்டும் பிரெஞ்ச் கயானாவிற்கு திருப்பி அனுப்பும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் இந்திய நேரப்படி அதிகாலை 2.07 மணியில் இருந்து 3. 23 மணிக்குள் ஐரோப்பாவின் ஏரைன் 5 ராக்கெட் மூலம் ஜிசாட் 11 செயற்கைகோளை விண்ணில் செலுத்த பிரஞ்சு கயானா ஏவுதளம் நேரம் தந்திருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
...
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*