57.3% சதவிகித மருத்துவர்கள் மருத்துவம் படிக்கவில்லையாம்! - அதிர்ச்சி கிளப்பும் ஆய்வு

சென்ற ஆண்டின் பிற்பகுதி, வடதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்த நேரம். வேலூர் மாவட்ட ஆட்சியர், டெங்கு காய்ச்சலுக்காக எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக, பள்ளிகொண்டா பகுதியில் இருந்த அகரம் கிராமத்திற்குச் செல்கிறார். அப்போது அங்கிருந்த சிறிய மருத்துவமனையைப் பார்த்தவருக்கு சந்தேகம் உண்டாகிறது. உடன் வந்த அதிகாரிகளை விசாரிக்கச் சொல்கிறார்.
அதிகாரிகள், தன் மருத்துமனைக்கு வருவதைக் கண்ட மருத்துவர், அங்கிருந்து தப்பிச் செல்கிறார். பின் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தபோதுதான் தெரிகிறது, அந்தச் சிறிய மருத்துவமனையைப் பல ஆண்டுகளாக இயக்கியது ஒரு போலி மருத்துவர் என்று.
அது போல், தருமபுரியில் பிக்கிலி மலைப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் சந்தோஷிற்கு, விளையாடும்போது கண்களில் அடிபட்டுவிடுகிறது. சிறு காயம்தான். அஞ்சும் அளவிற்கெல்லாம் எதுவும் இல்லைதான் என்றாலும், கண்களில் அடிபட்டதால், அவனை உடனடியாக, அந்தப் பகுதியில் இயங்கிவந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் பெற்றோர்கள். அங்கிருந்த மருத்துவர், கண்களில் ஏதோ மருந்திடுகிறார். அதன் பின், அந்த சிறுவனின் கண்களும், முகமும் உடனடியாக வீங்கிவிடுகிறது. அவன் வலி தாளாமல் துடித்துள்ளான். மருத்துவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனடியாக அவனை தூக்கிக் கொண்டு அந்தப் பகுதியில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைகிறார்கள் அவனது பெற்றோர்கள். அவனைப் பரிசோதித்த மருத்துவர், 'தவறான சிகிச்சையால் அவனது கண் மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது' என்கிறார்.
பின்பு, மேற்கொண்ட ஒரு நீண்ட விசாரணையில்தான் தெரிகிறது, அவனுக்கு முதலில் சிகிச்சை அளித்த மருத்துவர், போலி மருத்துவர் என்று. அவரும் அந்தப் பகுதியில் ஏறாத்தாழ பத்து ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார்.
இது போன்ற செய்திகளை நீங்களும் கடந்து வந்திருக்ககூடும். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் விஷயமாக இதுநாள் வரை இருந்தாலும், இந்தியாவில் போலி மருத்துவர்கள் குறித்து உலக சுகாதார மையம் அண்மையில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள 104 பக்க அறிக்கை மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. ஆம், அவர்களின் ஆய்வறிக்கையின்படி ஏறத்தாழ, இந்தியாவில் மொத்தம் உள்ள மருத்துவர்களில் 57.3 சதவீதம் பேர் போலி மருத்துவர்கள்.
இந்தியாவில் மருத்துவர்கள்:
வளர்ச்சி பொருளாதாரத்தில் நிபுணரான சுதிர் ஆனந்தும், ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் விக்டோரியா ஃபேனும் இணைந்து, இந்திய மருத்துவ பணியாளர்கள் குறித்து ஒரு விரிவான ஆய்வை, உலக சுகாதார மையம் சார்பாக மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள், தங்களது ஆய்வு முடிவுகளை ’The Heath workforce in India' என்ற தலைப்பில் கடந்த மாதம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அவர்களது ஆய்வு முடிவுகள்
* இந்தியாவில் 2001 ம் ஆண்டின் மக்கள் தொகை, சுமார் நூற்றிரண்டு கோடி (சரியாக 1,028, 610, 328). அதில் இருபது லட்சத்து, அறுபத்தி ஒன்பதாயிரத்து ஐந்நூற்று நாற்பது பேர் மருத்துவப் பணியாளர்கள். அதில் 819, 475 பேர் மருத்துவர்கள், 630, 406 பேர் செவிலியர்கள் மற்றும் 24, 403 பேர் பல் மருத்துவர்கள்.
* மொத்தமுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கையில் 77.2 சதவீதம் பேர் அலோபதி மருத்துவர்கள், 22.8 சதவீதம் பேர் ஆயுர்வேத, ஹோமியோபதி, யுனானி மற்றும் பிற மருத்துவர்கள்.
* ஒரு லட்சத்திற்கு 79.7 பேர் என்ற கணக்கில் மருத்துவர்களும், 61.3 பேர் என்ற கணக்கில் செவிலியர்கள் மற்றும் தாதிகளும், 2.4 பேர் என்ற கணக்கில் பல் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
* மொத்தம் உள்ள அலோபதி மருத்துவர்களில் 31.4 சதவீதம் பேர் வெறும் மேல்நிலைப்பள்ளியை மட்டுமே முடித்தவர்கள். மொத்தமாக 57.3 சதவீதம் பேர் மருத்துவக் கல்வி தகுதி இல்லாதவர்கள்.
* கிராமப்புறங்களில்தான் அதிகமாக போலி மருத்துவர்கள் இருக்கிறார்கள். நக
* இந்திய மொத்த மக்கள் தொகையில் 3.1 சதவீதமாக உள்ள கேரளாதான், தேசத்திற்கு 38.4 சதவீத செவிலியர்களை வழங்கி இருக்கிறது.
இந்த ஆய்வு, 2001 -ம் ஆண்டின் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டும், 593 மாவட்டங்களிலிருந்து கிடைத்த தரவுகளைக் கொண்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் நிலையில், 2011 ம் ஆண்டு விரிவான மக்கள் தொகை கணக்கு கிடைத்தபின், இதுபோன்ற ஆய்வு மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் மட்டுமல்ல, மருத்துவக் கட்டமைப்பும் மோசம்தான்!
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள, இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயலாளர் மருத்துவர் ரீனா நய்யார், “இன்னும் எங்களுக்கு அதிகாரபூர்வமாக ஆய்வு முடிவுகள் வந்து சேரவில்லை” என்று கூறி உள்ளார். மேலும், “நிச்சயம் உரிய மருத்துவப் படிப்புகள் படிக்காமல், மருத்துவத் தொழில் பார்ப்பவர்கள் அனைவரும் போலி மருத்துவர்கள்தான்” என்றார்.
தமிழ் நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம், “அரசு முறையாக இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி மருத்துவர்க்ளுக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். ஆனால், அதே நேரம் நம் தேசத்தில் போலி மருத்துவர்கள் மட்டும் சிக்கல் இல்லை. நமது மருத்துவ உள் கட்டமைப்புகளும் மிக மோசமானதாகதான் இருக்கின்றன.
பெரும்பாலான மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான் இருக்கின்றன. ஆனால், அதன் உள்கட்டமைப்பு வசதிகள் உண்மையில் கவலை அளிப்பதாக இருக்கிறது. அதிலும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.
- மு. நியாஸ் அகமது