கஞ்சமலை வாழ் சித்தர்களும் - சரபங்க முனிவரின் சமாதி தலமும்:
>> சித்தத்தில் சிவத்தை வைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து , ஆத்ம சக்தியை எழுப்பி, அட்டமா சித்தி பெற்று தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர். அதனால்தான், இதுவரை கோவில் கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை தேடிச்சென்று தரிசனம் செய்து அருமையான நல்ல அனுபவங்களை பெற்று மனதில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். நல்ல வழிகாட்டியாக மட்டும் அல்லாமல் இம்மைக்கும் –மறுமைக்கும் நன்மை விளையும் வண்ணம் சித்தர்களின் பேரருள் நம்மை காத்து நிற்கும்.
>> அரூபமாக, பல சித்தர்கள் கஞ்சமலையில் இன்றும் உலவி வருவதாக மக்கள் நம்புகிறார்கள். மருத்துவ குணங்கள் நிறைந்த கருமை நிறங்கொண்ட பல மூலிகைகள் இங்கே காணப்படுகின்றன. சேலத்திற்கு மேற்கில் 14 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சமலை. இங்கே சித்தேசுவரர் திருக்கோயில் மலையின் அடிவாரத்தில் உள்ளது. இதுவே காலாங்கிநாதரின் ஜீவ சமாதியாகும்..
>> காலாங்கி நாதர் என்ற கஞ்சமலை சித்தர். திருமூலரின் வழிதோன்றலும் போகரின் ஞான குருவும் ஆவர். காற்றை அங்கியாக அணிந்தவர். இவரது உடல் அணுக்களால் கட்டப்பட்டது இல்லை .. காற்றின் மூலக்கூறுகளால் ஆனது .தொட்டு உணரமுடியாது பார்த்து உணர்ந்து கொள்ளும் ஒளிஉடலை பெற்றவர்... இது யோகத்தின் மிக உயரிய நிலையாகும். சித்தர்கள் இவரை வழிபட்டதால் சித்தேசுவரர் ஆகியுள்ளார். திருக்கோயிலின் பின்புறம் காந்ததீர்த்தம் உள்ளது. அருகில் பிரமாண்டமான நந்தி உள்ளது. சிறிய ராஜகோபுரமும், மகாமண்டபமும் கொண்ட அழகிய கோயில் இதுவாகும் .
>> காலாங்கி நாதர் ஞானம் ;
சாண்வயிற்றா லலையாதே நிதம்
சஞ்சலப்பட்டுக் கொண்டே மலையாதே
ஆணுவத் தாலுலையாதே -உனக்
கானந்த முத்தியது நிலையாதே ...
சஞ்சலப்பட்டுக் கொண்டே மலையாதே
ஆணுவத் தாலுலையாதே -உனக்
கானந்த முத்தியது நிலையாதே ...
பொருளாசை பிடித்து அலைந்து மனதையும் சஞ்சலத்தில் வைத்து ஆணவம் பிடித்து அலையாமல் ஆனந்த முக்தியை நாடி போகச் சொல்கிறார் ...
இவரது ஜீவசமாதி சேலம் அருகில் இளம்பிள்ளை எனும் கிராமத்திலுள்ள கஞ்ச மலையில் உள்ள அமாவாசைக் கோவில் என்று அழைக்கப்படும் கோவிலில் உள்ளது ..முருக பெருமான் சன்னதி அருகே உள்ளது .ஞான குருவாக முருகபெருமான் அருள்பாலிக்கிறார் .
சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ''சித்தர் கோவில் '' என்றே பேருந்து இயக்கப் படுகிறது .பேருந்தில் 30 நிமிடத்தில் சென்று விடலாம்...14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .அருமையாக உள்ளது ஒருமுறை சென்று வாருங்கள்....
இளம்பிள்ளை'யின் கதை :
>> ஒருமுறை திருமூலரும் இவரது சீடன் காலாங்கிநாதரும் கஞ்சமலைக்கு வந்து சேர்ந்தார்கள் . தனது தேகத்தை இளமை ஆக்கிக் கொள்ள அரிய மூலிகைகளைத் தேடினர். ஒரு சமயம் குருவிற்காக, உணவு சமைத்திடச் சென்ற சீடர், அருகில் கிடந்த குச்சியால் அடுப்பில் வெந்து கொண்டிருந்த சாதத்தைக் கிளற, வெள்ளைச் சாதம் கருப்பு நிறமாக மாறியது. அதனை குருவிற்கு படைத்திட முடியாது என்று எண்ணி தானே அந்த உணவை உண்டார். அடுத்த கணமே, அவரது வயோதிக உரு நீங்கி, இளைஞன் உருவைப் பெற்றார்.
மூலிகை தேடச் சென்ற குரு, திரும்பி வந்து, உருமாறிய சீடனைப் பார்த்து அதிசயித்தார். அதற்குக் காரணத்தைக் கேட்டபோது, அந்தக் குச்சியைப் பற்றி அறிந்து கொள்கிறார் , பின்பு அக்குச்சி எங்கே என்று கேட்க, சீடன், அடுப்பில் அதனை எரித்து விட்டதாக கூற அதையறிந்து வருத்த முற்றார். அந்த அரிய மூலிகைக் குச்சியை எங்கே போய் தேடுவது? எனவே, சீடன் உட்கொண்ட உணவையே கக்கவைத்து, அதனையே தானும் உண்டாராம் குருநாதர். சிறிது நேரத்தில், அவரும் இளைஞனாக, `இளம்பிள்ளை' யாகக் காட்சியளித்தார். அது முதல் இந்தத் தலமும் `இளம்பிள்ளை' என்றே அழைக்கப்படலாயிற்று. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் அலை அலையாக வந்து செல்கின்றனர் .மிக பழமையான வரலாறு கொண்டது கஞ்சமலையாகும்.
சரபங்க முனிவர் சமாதி பெற்ற - ஓமலூர் கோட்டை :
>> சரபங்க முனிவரின் வரலாறு இராமாயண காலத்தோடு தொடர்புடையது . கம்பராமாயணத்திலும் ஆரண்ய காண்டத்தில் இவர் பாடப்படுகிறார் . இராமன் , சீதை மற்றும் இளவளோடு சரபங்க முனிவரின் ஆசிரமத்தை அடைந்து அவர்தம் ஆசிகளைப் பெறவேண்டி அவரின் குடிலுக்குச் சென்றனர். சீதா- ராம லக்ஷ்மணர்களைக் கண்ட அம்முனிவர், “ராமா, உன் வருகையால் என் மனம் உவகை அடைகிறது. இந்த ஆசிரமும் பாவனமாகி உள்ளது. புவியில் என் கடமை முடிந்து இறைவனடி சேர விழையும் என்னை உள்மனம் ‘’ராமன் வரும் வரை காத்திரு’ என்று ஆணையிட்டவாறு இருக்கிறது. ஆகவே உன்னைப் பார்ப்பதற்காகவே இந்த சரீரத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.மூவரும் முனிவரடி பணிந்து ஆசிபெற்றனர்.
“ஐயனே, தாங்கள்தான் இந்த தண்டக வனத்தில் எங்களுக்கு வழிகாட்டவேண்டும்” என்ற ராமனை நோக்கி ””என் சக முனிவர் சுதீக்ஷணர் என்னைப் போலவே உனக்காகக் காத்திருக்கிறார். அவர் தான் உனக்கு சரியான வழிகாட்டி, அவரிடம் ஆசிபெற்று அவர் காட்டும் இடத்தில் உன் குடிலை அமைத்துக்கொள். என் கோரிக்கை நிறைவேறிவிட்டது. எனக்கு விடை கொடு. உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்” என்று கூறி தன் -பத்தினியோடு ஞனாக்னியைப் பற்றி உயர் நிலை எய்தினார் சரபங்க முனிவர் .. இவர் ஹோமம் செய்த தலமே ஓமலூர் என்றும் கூறப்படுகிறது.
>> தாரமங்கலத்துக்கு வடமேற்கில் உள்ளது ஓமலூர். தாரமங்கலத்தில் நடைபெற்ற சிவ-பார்வதி திருமணத்திற்கு `ஹோமம்' வளர்த்த இடமே ஓமலூர் என்றும் கூறப்படுகிறது. நீர் எடுத்த இடமே ஜலகண்டபுரம் என்றும், அமரர்கள் தங்கிய இடம் அமரகுந்தி என்றும் செவிவழிச் செய்திகள் சொல்கின்றன ..
>> ஓமலூரில் பழமையான சிவாலயம் அய்யன் -வசந்தேசுவரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். `உண்ணாமுலையம்மன்' என்ற அபிதகுஜாம்பிகையே அன்னையின் திருநாமம். இக்கோவிலில் சரபங்க மாமுனிவரின் ஜீவசமாதி உள்ளது. சரபங்க முனிவர் சித்தி பெற்றதால், `சரபங்கா' என்ற பெயருடன் ஓர் ஆறும், இந்த மாவட்டத்தில் பாய்வது குறிப்பிடத்தக்கது. கோட்டை வசந்தீஸ்வரர் ஆலயத்தில் நவகிரகம் தமது மனைவிமார்களுடன் தத்தமது வாகனத்தில் அமர்ந்து அருள்பாளிகின்றனர். இங்கு அமர்ந்து தவம் செய்ய அருமையாய் இருந்தது ..
விநாயகா மிசன் : 108 லிங்கம் :
>> அரியானூரிலேயே மற்றோர் அதிசயம் உள்ளது. சரபங்க முனிவர் தவமிருந்ததாகக் கூறப்படும் இந்த கஞ்சமலைச்சாரலிலேயே, (விநாயகா மிசின் )வழி நெடுகிலும் 108 லிங்கங்கள் அமைந்துள்ளதைக் காண கண் கோடி வேண்டும் . சேலம்-ஈரோடு நெடுஞ்சாலையில், வலப்புறம், தொலைவிலிருந்தே மலைச்சாரலில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கத் திருமேனிகளும், அவற்றின் மேலே அழகிய விமானங்களும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. ஆலய வளாகத்திற்குச் செல்ல இருபுறமும் பாதை உள்ளது.
பிரதான வாசலில், பிரமாண்டமாக ஒரு விநாயகர் அமர்ந்திருக்க அருணாசல சுந்தரேசுவரர்' மையமாகக் கொண்ட, பிரமிக்கத்தக்க ஒரு மூலவர் சந்நதியும், அதனை எதிர்கொள்ளும் வகையில் சுற்றிலும் 107 லிங்கங்கள் தனித்தனி சந்நதியும் கொண்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் சிவனின் திருநாமம் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகப் பெருமான் அருள்பாலிக்கும் ஆறுபடை வீடுகளும், அந்தந்த தலத்துப் பெருமானும் இடம்பெறும் மிகப் பெரிய கோயில் ஒன்றும் உருவாகி வருவதைக் காண்கிறோம். மற்றொரு குன்றில் அன்னை ராஜராஜேசுவரிக்கும் அன்னபூரணிக்கும் சந்நதிகள் அமைந்துள்ளன.
சரபங்க முனிவரின் ராம தரிசனம் - பின்பு ஹோமகுண்டம் வளர்த்த திருவுருவ காட்சி அருமையாய் அமைந்துள்ளது ..அட்சய ஐசுவரிய லட்சுமி சமேத பெருமாள் சந்நதியும் அமைந்துள்ளது. வன சஞ்சார ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயராக வடக்கு நோக்கி சந்நதி கொண்டுள்ளார். இந்த அற்புதத் திருத்தலத்தில் சிவலிங்கத் திருமேனிகளை வணங்கியவாறே, மலையை வலம்வரும்போது கஞ்சமலையின் இயற்கை அழகையும் கண்டு களிப்புறலாம் . ஒருமுறை சென்று வாருங்கள் ....